புலனாய்வு திறன் நிறைந்த விருச்சிக ராசி
ராசி மண்டலத்தில் எட்டாவது ராசியாக
இருப்பது விருச்சிக ராசியாகும். எட்டாம் இடம் என்பது, மறைவிடம்
மட்டுமல்ல, மறைபொருள்களை உலகிற்கு தெரியப்படுத்தும் இடமும் ஆகும்.
கண்களுக்கு புலப்படாத, பல அமானுஷ்ய சக்திகளை அறியும் ஆற்றலையும் கொடுப்பதாகும்.
விசாக நட்சத்திரத்தின் நான்காம் பாதம், அனுஷ நட்சத்திரத்தின்
நான்கு பாதங்கள், கேட்டை நட்சத்திரத்தின் நான்கு பாதங்களில் பிறந்தவர்கள், விருச்சிக
ராசிக்காரர்கள்.
இது நீர் ராசி. இதன் அதிபதி செவ்வாய்.
விருச்சிக ராசிக்காரர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகே, கிணறு, சாக்கடை, குடிசை, மார்ச்சுவரி
போன்ற ஏதாவது ஒன்று இருக்கும்.
இவர்களிடம் இருந்து ரகசியத்தை அறிவது
மிகவும் கடினம். ஆனால், மற்றவர்களின் ரகசியத்தை எளிதாக அறியும் ஆற்றல் இவர்களிடம்
அதிகமாக இருக்கும்.
இவர்கள், வெளியில் இருந்து சாதிப்பதை விட, பின்னால் இருந்து சாதிப்பதே அதிகம். தேடப்படும் நபர்கள், தேடப்படும்
பொருட்கள் என துப்பறிந்து எளிதில் கண்டுபிடிக்கும் சக்தி இவர்களிடம் இயற்கையாகவே
இருக்கும்.
பில்லி, சூனியம், ஏவல், மந்திரம், தந்திரம், குறி சொல்லுதல் போன்றவற்றில் இவர்களுக்கு ஈடுபாடு அதிகம்
இருக்கும். சிலர், இவற்றை நன்றாக தெரிந்தும் வைத்திருப்பார்கள்.
சாக்கடை, இறைச்சி கூடம் போன்ற துர்நாற்றம் வீசும் இடங்களுக்கு அருகே, தொழில்
செய்பவர்கள் பெரும்பாலும், விருச்சிகத்தோடு தொடர்புடையவர்களாகவே இருப்பார்கள்.
விருச்சிக ராசிக்காரர்கள் பெரும்பாலும், தமது
தந்தையோடு ஒத்துப் போவதில்லை. அதே போல், வயதுக்கு மீறிய நட்பு, வயதுக்கு மீறிய காதல், வயதுக்கு மீறிய காமம் எல்லாம், விருச்சிகத்திடம்தான் வெளிப்படும்.
மருத்துவம், ஆராய்ச்சி, கிணறு
தொடுதல், அகழ்வு ஆராய்ச்சி போன்றவற்றில் விருச்சிகத்தின் பங்கு
இன்றியமையாதது ஆகும்.
விருச்சிக ராசிக்காரர்கள், பல
விஷயங்களை மற்றவர்களிடம் இருந்து மறைத்து விடுவார்கள். மற்றவர்கள்
துன்பப்படக்கூடாது என்ற எண்ணத்தில், இவர்கள் மறைக்கும் பல உண்மைகள், சில நேரங்களில் இவர்களுக்கே பாதிப்பாக அமைந்து விடுவதும்
உண்டு.
வாங்கிய கடனில், எட்டில் ஒரு பங்கை
மட்டும்தான் வெளியில் சொல்வார்கள்.
மனம், சிந்தனை, புத்தி போன்றவற்றுக்கு காரகத்துவம் வகிக்கும் ஐந்தாம் அதிபதி
குருவும், அதை செயல்படுத்தும் பத்தாம் அதிபதியான சூரியனும் நட்பு
கிரகங்கள் என்பதால், இவர்கள் நிர்ணயிக்கும் இலக்கை நிச்சயமாக அடைய முடியும்.
ஆனால், அந்த இலக்கு என்பது, நடைமுறையில் சாத்தியம் ஆவதாகவும், தமக்கும், தம்மை
சார்ந்தவர்களுக்கும் நன்மை பயப்பதாகவும் இருக்க வேண்டும். இதில்தான், இவர்களின்
எதிர்காலம் அடங்கி இருக்கிறது.
இவர்கள்,
எதையும் கடன் வாங்கிதான் செய்ய வேண்டி
இருக்கும். அதுவே பரிகாரமாவும் இருக்கும். வேலை வாய்ப்பும் நல்லபடியாக அமையும்.
குடும்பம் மற்றும் குழந்தைகள்
இவர்களுக்கு நல்ல மாதிரியாக அமையும்.
தாயாருடைய வாழ்க்கை போராட்டமாக
இருக்கும். தாயாரின் அன்பும், ஆதரவும் எதிர்பார்த்த அளவுக்கு அமையாது.
மனைவி வழியில், அதிக
செலவும், பயணமும் இருக்கும். மனைவியை சமாதானப்படுத்த அவ்வப்போது
சுற்றுலா அழைத்து செல்வது நல்லது.
கடன், வம்பு, வழக்கு, நோய் போன்றவற்றால் பாதிப்பு இருக்கும். ஆனாலும், அவை
அனைத்தில் இருந்தும் வெற்றி அடைவது உறுதி.
உலக அளவில் பெரிய அளவில் சாதித்த தொழில்
அதிபர்கள் பலர் விருச்சிகத்தோடு தொடர்புடையவர்கள்.
தடைகள் அகல – அதிர்ஷ்டம்
பெருக
விருச்சிக ராசிக்காரர்கள் தங்கள்
அதிர்ஷ்டத்தை பெருக்கிக் கொள்ள, குரு பகவானுக்குரிய மஞ்சள் துணியை கைக்குட்டையாக
பயன்படுத்தலாம்.
கஷ்டங்கள் மற்றும் தடைகளில் இருந்து
விடுபட, சந்திரனுக்கு உரிய வெள்ளை நிற ரிப்பனை, திங்கள் கிழமைகளில்
கத்தரி கோலால் துண்டு துண்டாக வெட்டி போடுவது நல்லது.
மண் பத்திரங்களில் தேன் அல்லது
குங்குமம் வைத்திருப்பது அதிர்ஷ்டத்தை தரும் என்று லால் கிதாப் கூறுகிறது.
மேலும்,
அரச மரம் மற்றும் முள் செடிகளை
வெட்டுதல் கூடாது. செவ்வாய் கிழமைகளில் விரதம் இருப்பது நல்லது.
பால் காய்ச்சும்போது பொங்கி வடியாமல்
பார்த்துக் கொள்ள வேண்டும். யாரிடம் இருந்தும் இலவசமாக பொருளை பெறாமல் இருப்பது
நல்லது.
செவ்வாய் கிழமைகளில் தேன், குங்குமம், சிவப்பு ரோஜாக்களை
ஓடும் நீர் அல்லது கடலில் விட துரதிர்ஷ்டங்கள் நீங்கும்.
செவ்வாய் கிழமையன்று இஷ்ட தெய்வத்திற்கு
சிவப்பு பூந்தி படைத்து வழிபடுவது நல்லது. அனுமனுக்கு செந்தூரம் மற்றும் வஸ்திரம்
சாத்தி வழிபட கடன் மற்றும் வறுமை நீங்கும். நோய்களும் அகலும்.
இவை அனைத்தும் விருச்சிக ராசிக்கான
பொதுவான பலன்களே. அவரவர் ஜாதகத்தில் உள்ள கிரக அமைப்புகளை பொறுத்து பலன்கள்
மாறுபடும்.
No comments:
Post a Comment