Tuesday, 15 October 2019

பரணி நட்சத்திர பலன்கள்




நியாய தர்மங்களை உணர்ந்து நடந்துகொள்வதுடன், தன்னை சார்ந்தவர்களும் அப்படியே இருக்க வேண்டும் எண்று விரும்புபவர்கள் பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்.
பரணியில் பிறந்தவர்கள் தரணி ஆளுவார்கள் என்ற பழமொழிக்கு ஏற்ப, பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், குறைந்த பட்சம் தங்கள் நண்பர்கள், மற்றும் உறவினர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்து, அன்பால் அவர்களை ஆளுவார்கள் என்பதை மறுப்பதற்கில்லை.
பெயரின் முதல் எழுத்து லி, லு, லே, லோ என்ற எழுத்துக்களை கொண்டவர்களும் பரணி நட்சத்திர ஆதிக்கம் கொண்டவர்களே.
ராசி சக்கரத்தில் இரண்டாவது நட்சத்திரமான பரணி சுக்கிரனின் நட்சத்திரம் ஆகும். செவ்வாய்க்கு உரிய மேஷ ராசியில் அமைந்துள்ளது. அதனால், அறுசுவை உணவிலும், கலை, காவியங்களிலும், சுகபோகத்திலும் இவர்களுக்கு அதிக நாட்டம் இருக்கும்.
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்களுடைய நல்ல மனது மற்றும் நடவடிக்கைகளால், அனைவரையும் எளிதாகக் கவர்ந்து விடுவார்கள்.
இவர்கள் கூடுமானவரை நியாய தர்மங்களை உணர்ந்து நடந்து கொள்வார்கள். அப்படியே மற்றவர்களும் நடந்து கொள்ள வேண்டும் என்றும் விரும்புவார்கள். இவர்கள் செய்யும் தவறுகளை, குறிப்பறிந்து சுட்டிக்காட்டினால், அதை திருத்திக் கொள்வார்கள்.
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், பலரை பாதுகாத்து அரவணைத்து செல்வார்கள். ஆனால், இவர்களை பாதுகாக்க இன்னொருவர் கண்டிப்பாக தேவைப்படும்.
பரணியில் பிறந்த பெண்களுக்கும் இதே குணம் உண்டு. இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் மிகவும், அழகான, நளினமான தோற்றத்தை கொண்டிருப்பார்கள். குடும்பத்தில் உள்ளவர்களை பாதுகாக்க வேண்டும் என்ற முனைப்போடு செயல்படுவார்கள். ஆனாலும், நேரம் காலம் தெரியாமல், தங்கள் மனதில் தோன்றுவதை அப்படியே பேசிவிட்டு கெட்ட பெயரை சம்பாதித்து கொள்வார்கள்.
பரணி நட்சத்திர காரர்கள், நல்ல வேலைகள் மற்றும் உயர்பதவிகளில் இருப்பார்கள். சாதாரண வேலையில் இருந்தாலும், அதை முழுமனதோடு செய்வார்கள். இருக்கும் இடத்தையும், பணி செய்யும் இடத்தையும் சுத்தமாகவும் அழகாகவும் வைத்திருப்பார்கள்.


பரணி நட்சத்திரத்தில் நின்ற கிரகம், மனநிலை பாதித்தவர்கள், டி.பி, வீசிங் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குடும்பத்தில் இருந்து பிரிந்து இருப்பவர்கள், இரண்டு திருமணம் முடித்தவர்கள், தாயின் ஆதிக்கம் நிறைந்த குடும்பம் போன்றவற்றை சொல்லும்.
பரணி, மனுஷ கண நட்சத்திரமாகும். இதன் அதிதேவதை எமன். பரிகார தெய்வம் துர்கை. நாகப்பட்டினம் அருகில் அமைந்துள்ள கோரக்க சித்தர் ஜீவ சமாதியையும் வழிபடலாம். உகந்த மலர் முல்லை.
பரணியின் வடிவம் மண் பாத்திரம், அடுப்பு, முக்கோணம் போன்றவை ஆகும். தொழில் நிறுவனம் நடத்துபவர்கள் மேற்கண்ட வடிவத்தை லோகோவாக பயன்படுத்தலாம்.
பரணிக்கு உரிய விருட்சம் நெல்லி மரம் என்பதால், நெல்லி மரக்கன்றுகளை நட்டு நீரூற்றி வளர்ப்பது நல்லது. அல்லது கோயில் மற்றும் பிற இடங்களில் உள்ள நெல்லி மரத்திற்கும் நீர் ஊற்றலாம்.
இதன் மிருகம் ஆண் யானை, பறவை காகம். எனவே இவற்றுக்கு தொந்தரவோ, இடையூறோ கொடுக்காமல் இருக்க வேண்டும்.
பரணி நட்சத்திரத்திற்கு உரிய கோயில், மயிலாடுதுறையில் இருந்து நெடுங்காடு வழியாக காரைக்கால் செல்லும் வழியில், நல்லாடை என்ற ஊரில் அமைந்துள்ள அக்னீஸ்வரர் உடனுறை சுந்தரநாயகி கோயில் ஆகும்.
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்கள் ஜென்ம நட்சத்திரத்தன்று இந்த ஆலயம் சென்று வழிபடுவது நல்லது.
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்கள் அதிர்ஷ்டத்தை பெருக்கிக்கொள்ள, எள் தானம் செய்வது நல்லது.

No comments:

Post a Comment