Tuesday, 15 October 2019

கடக ராசி

அதிர்ஷ்டமும் ஆபத்தும் நிறைந்த கடகம்

நண்டு போல பல கால்களையும், நான்கு பக்கமும் போகக்கூடிய திறமையும், மற்ற யாராலும் யூகிக்க யூகிக்க முடியாத செயல்களும் நிறைந்தவர்கள் கடக ராசிக்காரர்கள்.
புனர்பூசம் நட்சத்திரத்தின் நான்காம் பாதம், பூசம் நட்சத்திரத்தின் நான்கு பாதங்கள் மற்றும் ஆயில்ய நட்சத்திரத்தின் நான்கு பாதங்களிலும் பிறந்தவர்கள் கடக ராசிக்காரர்கள்.
கடக ராசிக்காரர்களுக்கு அரியாசனத்திலும், உயர் பதவியிலும் அமரும் யோகம் அதிகம் உண்டு. அரசியல் தலைவர்களில் பலர் கடக ராசி அல்லது கடக லக்னத்தில் பிறந்தவர்களாக இருப்பார்கள். வெளிநாடு செல்லும் யோகமும் இவர்களுக்கு அதிகம் உண்டு.
ஆறு, எட்டு, பனிரண்டாம் இடங்களை மறைவிடம் என்று ஜோதிடம் சொல்கிறது.  கடக ராசிக்கு ஆறு, எட்டு, பனிரண்டுக்கு உரிய கிரகங்களின் நட்சத்திரங்கள் எல்லாம், கடக ராசியிலேயே இடம் பெற்றுள்ளன. அதனால், இவர்களுக்கு ஆபத்தும், விபரீத ராஜ யோகமும் இயற்கையாகவே அமைந்து விடுகிறது.
கடக ராசிக்காரர்கள், வீடுகளை வாடகைக்கு விடும்போதும் மிகவும் கவனமாக  இருக்க வேண்டும். முன் பின் அறிமுகம் இல்லாத நபர்களுக்கு வாடகைக்கு விட்டால், அங்கே சட்ட விரோத அல்லது சமூக விரோத செயல்கள் நடக்க வாய்ப்பு உண்டு.
கடக ராசிக்காரர்கள் பல பேருக்கு தகுதிக்கு மீறிய பதவியில் அமரும் அளவுக்கு பல நேரங்களில் அதிர்ஷ்டம் தாமாகவே அமையும். அதை முறையாக பயன்படுத்திக் கொள்ள முயற்சித்தால் வெற்றி நிச்சயம்.
கடக ராசிக்கு, சந்திரனே அதிபதியாக இருப்பதால், இயற்கையிலேயே கற்பனை வளமும், கிரியேடிவிடியும் நிறைந்து இருக்கும். அத்துடன், எதையும் விரைவாக  சிந்தித்து  முடிவெடுக்கும் திறனும் இவர்களுக்கு உண்டு.  அடிக்கடி மன சஞ்சலத்துக்கும் ஆளாவார்கள்.
வசதியான, சொகுசான இருப்பிடங்கள், நவீன ரக கார்கள் எல்லாம் இவர்களுக்கு தாமாகவே அமையும். இவர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகே   நீர் சூழ்ந்த பகுதிகள், ஆறு, ஏரி, குளம், குட்டை, கடல் என ஏதாவது ஒன்று  இருக்கும். குறைந்த பட்சம் ஒரு சின்ன வாய்க்காலாவது இருக்கும்.
வீட்டின் குளியலறை மற்றும் கழிவறையில் கரையான், கரப்பான் பூச்சி, பூரான் என்று எப்போதும் குடும்பம் நடத்தும். வீடு கூட மணல் பாங்கான இடத்தில்தான் இருக்கும் அங்கே எறும்புகள் அதிகமாக தென்படும்.
ராமர் இந்த ராசியில பிறந்ததால், இதில் பிறந்த பலருக்கு நாடாளும் யோகம், தாமாகவே அமையும். குறைந்த பட்சம் கவுன்சிலர் பதவி அல்லது ஏதாவது ஒரு பொது அமைப்புக்கு பொருப்பாளராக இருக்கும் நிலையாவது ஏற்படும்.
ஆனாலும், பதவிகளை தியாகம் செய்துவிட்டு, சன்யாசம் போகவும் சிலர் தயாராக இருப்பார்கள். பதவிகள் தாமாக தேடி வருவதும், அதை இவர்களே உதறி தள்ளுவதும் வாடிக்கையான ஒன்று. ஒரு சிலர் வேண்டுமானால் இதற்கு விதி விலக்காக இருக்கலாம்.
உறுதியான கொள்கை, விடாப்பிடியான தன்மை, எதையும் எதிர்த்து போராடும் தைரியம், நம்பி வந்தவர்களை அரவணைக்கும் தலைமை பண்பு  எல்லாம், கடக ராசி காரர்களுக்கு அதிகமா இருப்பதால், இவர்களை சுற்றி எப்போதும் ஒரு தொண்டர் கூட்டம் இருக்கும்.
பொது வாழ்க்கையில பெரிய சாதனை படைக்கும் கடக ராசிக்காரர்களுக்கு, தனிப்பட்ட குடும்ப வாழ்க்கை பெரிய அளவுக்கு பெரும்பாலும் திருப்திகரமாக அமைவது இல்லை. அப்படியே அமைந்தாலும், அதை முழுமையாக இவர்களால் அனுபவிக்க முடியாமல் போய்விடும்.
சந்திரன் நன்கு வலுவாக இருந்தால், இவர்களின் அணுகு முறைகள் எல்லாம் மிகவும் கம்பீரமாக இருக்கும். சிந்தனையும், செயல் வேகமும் மின்னல் வேகத்தில் இருக்கும். வட்ட முகமும், கவர்ச்சியான பேச்சும், செயல்பாடும் இவர்களை பல விதங்களில்  உயர்த்தும்.
பலருக்கு, சகோதர உறவுகள் சரியாக அமைவது இல்லை. சிலருக்கு தாயின் அன்பும் முழுமையாக கிடைக்காது. அப்படியே கிடைத்தாலும் அதை முழுமையாக  அனுபவிக்க முடியாது.
வருவாய்க்கும் கடனுக்கும் எப்போதும் குறைவு இல்லை. இவர்கள் மற்றவர்களுக்கு ஜாமீன் போடாமல் இருப்பது நல்லது.
மொத்தில், கடக ராசிக்காரர்கள், பல ஆபத்துக்களை சந்தித்தாலும், பல நேரங்களில் நல்ல உயர் பதவியில் அமருவார்கள். தேவை இல்லை என்று நினைத்தால், அதை தூக்கி எறியவும் தயங்க மாட்டார்கள்.

தடைகள் அகல – அதிர்ஷ்டம் பெருக
கடக ராசிக்காரர்கள், தங்கள் அதிர்ஷ்டத்தை பெருக்கிக்கொள்ள,  செவ்வாய்க்கு உரிய சிவப்பு நிற துணியை கைக்குட்டையாக பயன்படுத்தலாம்.
கடன், வம்பு, வழக்கு போன்ற தடைகள், இடையூறுகளை கட்டுப்படுத்த பிங்க்  நிற ரிப்பனை, வெள்ளிக் கிழமைகளில் கத்தரிக்கோலால் துண்டு துண்டாக வெட்டி போடலாம்.
செம்பு நட்டுகள் மற்றும் போல்டுகள் போட்ட கட்டிலில் உறங்குவதும், வெள்ளி டம்ப்ளரில் பால் அருந்துவதும் நல்லது என்று லால் கிதாப் கூறுகிறது.
மேலும், மருத்துவ தொழிலில் ஈடுபட்டுள்ள கடக ராசிக்காரர்கள், மிகவும் சிரமப்படும் ஏழைகளுக்கு இலவசமாகவோ அல்லது குறைந்த கட்டணத்திலோ சேவையாற்ற வேண்டும். ஆன்மிக விழாக்கள் மற்றும் பண்டிகைகளில் சேவையாற்றுவதும் நல்லது.
பௌர்ணமி அன்று தாயாரிடம் ஒரு வெள்ளி நாணயமும், கொஞ்சம் பச்சரிசியும் வாங்கி, அதை ஒரு வெள்ளை துணியில் முடிந்து, பீரோ அல்லது பணப்பெட்டியில் வைத்தால் வறுமை தீரும்.
இவை அனைத்தும் கடக ராசிக்கான பொதுவான பலன்களே. அவரவர் ஜாதகத்தில் உள்ள கிரக அமைப்புகளை பொறுத்து பலன்கள் மாறுபடும்.

No comments:

Post a Comment