Tuesday, 15 October 2019

ரிஷப ராசி

கலைத்திறனும் கவர்ச்சியும் மிகுந்த ரிஷபம்

ராசி மண்டலத்தில் இரண்டாவதாக இடம் பெற்றுள்ள ராசி ரிஷப ராசி ஆகும். பொறுமை, நிதானம், ஆழ்ந்த நுண்ணறிவு, அனைவரையும் மடக்கும் சாதுர்யம், பூகம்பம் போல பொங்கி எழும் தன்மை என அனைத்து குணங்களையும் ஒருங்கே கொண்டது ரிஷப ராசி.
கார்த்திகை நட்சத்திரத்தின் இரண்டு, மூன்று மற்றும் நான்காம் பாதங்கள், ரோகிணி நட்சத்திரத்தின் நான்கு பாதங்கள், மிருகசீரிடம் நட்சத்திரத்தின் முதல் இரண்டு பாதங்கள் ஆகியவை ரிஷப ராசியில் இடம் பெற்றுள்ளன.
பிரம்மன், கிருஷ்ணர், எமதர்மன், சனி பகவான் ஆகிய நான்கு கடவுள்களும் இந்த ராசியில் உள்ள ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், ரிஷப ராசியில் பிறந்தவர்களிடம் மேற்கண்ட தன்மைகள் நிறைந்திருக்கும்.
இது ஸ்திர ராசியாக இருப்பதால், எதையும் ஆழ்ந்து ஆலோசித்து, அசைபோட்டு அதன் பிறகு முடிவெடுக்கும் தன்மை நிறைந்திருக்கும்.
இந்த ராசிக்கு சுக்கிரன் அதிபதியாக வருவதால், உலகில் உள்ள அனைத்து சுகங்களையும் ஆண்டு அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் இயற்கையிலேயே இவர்களுக்கு மேலோங்கி இருக்கும். கலை சம்பந்தப்பட்ட ஏதாவது ஒரு ஞானமும் கைவரப்பெற்றவர்களாக இருப்பார்கள்.
ரிஷப ராசியின் அடையாளம் காலை என்பதால், உழைப்பே முழு மூச்சாக இருக்க வேண்டும். ஓய்வு எடுக்க நேர்ந்தால், உடல்நிலை பாதிக்கப்படும்.
இந்த ராசிக்கு வாக்கு, புத்தி என இரண்டுக்குமே அதிபதியாக புதன் விளங்குவதால், எவ்வளவு பெரிய மேதையையும் தமது சாதுர்யத்தால் மடக்கும் ஆற்றல் இருக்கும்.
இந்த ராசியில் சந்திரன் உச்சம் பெறுவதால், அழகு நிறைந்தவர்களாகவும், கலையான முகமும் கொண்டவர்கள். வித விதமான ஆடை, அணிகலன்களை அணிவதிலும், வாசனை திரவியங்களை பூசிக் கொள்வதிலும் ஆர்வம் அதிகம் இருக்கும்.
கிரியேட்டிவியாக சிந்திப்பதுடன், தேவை இல்லாமல் சிந்தித்து மனதை சஞ்சலப்படுத்திக் கொள்வதும் உண்டு. குளிர்ச்சி சம்பந்தப்பட்ட நோய்களும், சளித்தொல்லையும் இருக்கும்.
ருசியான உணவாக இருந்தால், வயிறு முட்ட சாப்பிட தயங்க மாட்டார்கள். திரவ உணவுகளை விரும்பி உண்ணும் குணம் அதிகமாக இருக்கும்.
பாசத்துக்கும், நட்புக்கும் அடிமையாகி, செக்கில் தலையை கொடுத்த மாடு போல, பல நேரம் மற்றவர்களுக்காக சிக்கலில் மாட்டிக் கொள்வதும் உண்டு. ஜல்லிக்கட்டு களத்தில் வீரர்கள் பலரை முட்டி முட்டி துரத்தும் காளைகள், வளர்க்கும் கன்னிப் பெண்களிடம் கட்டுண்டு நிற்பது போல, அன்புக்கு கட்டுப்படும் ரிஷப ராசிக்காரர்கள், சண்டை என வந்து விட்டால் முரட்டுக் காளையாய் மாறி விடுவார்கள்.
ரிஷப ராசிக்காரர்கள் எந்த வேலையும் இல்லாமல் முடங்கும் நிலை வரும்போது, உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப் படுவார்கள். எனினும் எந்த சூழ்நிலையிலும் இவர்களின் கலையான முகம் மாறாது.
இவர்கள் பெரும்பாலும், அலைந்து திரிந்து செய்யும் வேலையை விட, ஒரு இடத்தில் அமர்ந்து செய்யும் வேலையையே அதிகம் விரும்புவார்கள். அதேபோல், மூளைக்கு வேலை கொடுக்கும் விதத்தையே அதிகம் விரும்புவார்கள்.
ரிஷப ராசிக்காரர்களின் வீட்டுக்கு அருகில் மாட்டு தொழுவம் இருக்கும். அல்லது மாடுகள் அதிகம் வந்து செல்லும் இடமாக இருக்கும். அதேபோல, பேருந்து நிறுத்தங்கள், பெண்கள் விடுதிகள், வங்கி, ஏடிஎம், பால் பூத் என்று ஏதாவது ஒன்று இருக்கும்.
இவர்கள் எதை செய்தாலும், கண்டிப்பாக கடன் வாங்கித்தான் செய்ய வேண்டும். அதேபோல வழக்குகளை சந்தித்தே தீர வேண்டும். ஆனாலும், வழக்கில் வெற்றி நிச்சயம் உண்டு.
எண்ணமும் வாக்கும் ஒன்றாக இருக்கும். வாக்கு சாதுர்யமும், புத்திசாலித்தனமும் நிறையவே இருக்கும். பல பேர் பேசியே காரியத்தை சாதித்து விடுவார்கள்.
அளவுக்கு அதிகமான கற்பனை திறனும், கிரியேட்டிவ் ஐடியாவும் பஞ்சமில்லாமல் வந்துகொண்டே இருக்கும். ஆனாலும், சின்ன சின்ன விஷயத்தில் கூட அப்செட் ஆகி விடுவார்கள்.
பெரும்பாலான ரிஷப ராசி காரர்களுக்கு கல்வி, வீடு, மனை, வாகனம், தாயாரின் அன்பு அனைத்தும் இவர்களுக்கு முழுமையாக கிடைக்கும்.
பகவான் கிருஷ்ணரை போல, தாய் மாமன் உறவு தொடங்கி மாமனார் உறவு வரை, ரிஷப ராசி காரர்களுக்கு சரிவர அமைவதில்லை. மனைவி வழியில் விரயமும், பயணங்களும் அதிகம் இருக்கும்.
எட்டாம் அதிபதி குருவே பதினோராம் அதிபதியாக வருவதால், கடன், வழக்கு, நோய் எல்லாம் கண்டிப்பாக இருக்கும். ஆனால், அவை அனைத்தையும் வெற்றி கொண்டு மீண்டு எழுந்து விடுவார்கள்.
இவர்கள் கடுமையாக உழைத்தால் மட்டுமே முன்னுக்கு வர முடியும். அதே போல், பல தடைகளை கடந்தே வெற்றியை சுவைக்க முடியும். பெரும்பாலான ரிஷப ராசிக்காரர்கள், தங்கள் இளமை காலத்தை விட, பிற்காலத்தில் நல்ல மகிழ்ச்சியுடன் இருப்பதற்கு சனி பகவானே முக்கிய காரணம்.
ரிஷப ராசிகாரர்கள் தங்கள் வீட்டில் தண்ணீர், பால், துணிமணிகள், அரிசி ஆகியவற்றில் பற்றாக்குறை ஏற்படாமல் பார்த்துக் கொண்டாலே அதிர்ஷ்டம் தாமாக வரும்.
இவை அனைத்தும் பொது பலன்களே ஆகும். அவரவர் தனிப்பட்ட ஜாதகத்தையும், கிரக நிலைகளை பொருத்தும் பலன்கள் மாறுபடும்.
தடைகள் அகல – அதிர்ஷ்டம் பெருக
ரிஷப ராசிகாரர்கள் தங்கள் வீட்டில் தண்ணீர், பால், துணிமணிகள், அரிசி ஆகியவற்றில் பற்றாக்குறை ஏற்படாமல் பார்த்துக் கொண்டாலே அதிர்ஷ்டம் தாமாக வரும்.
ஆடைகளில் நல்ல வாசனை திரவியங்களை பூசிக்கொள்வது அதிர்ஷ்டத்தை தரும். காமம் தொடர்பான சிக்கல்கள் தீர ஸ்ரீ தத்தாத்ரேயரை வணங்கலாம் என்று லால் கிதாப் கூறுகிறது.
மேலும், ஏதாவது ஒரு ஏழைக்கு பசு மாடு வாங்கி தானம் செய்யலாம். ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் புதிய செருப்புகள் வாங்க கூடாது.
பட்டு, நைலான் போன்ற மென்மையான ஆடைகள் அதிர்ஷ்டம் தரும். எந்த பிச்சைக்காரருக்கும் இல்லை என்று சொல்லாமல் ஏதாவது ஒரு தானம் வழங்க வேண்டும்.
வாக்கு மற்றும் புத்திக்கு காரகத்துவமாக விளங்கும் புதனுக்கு உரிய பச்சை நிற கைக்குட்டையை பயன்படுத்தலாம். பிங்க் மற்றும் நீல நிற வண்ணங்களும் அதிர்ஷ்டம் தரும்.
இவை அனைத்தும் ரிஷப ராசிக்கான பொதுவான பலன்களே. அவரவர் ஜாதகத்தில் உள்ள கிரக அமைப்புகளை பொறுத்து பலன்கள் மாறுபடும்.

No comments:

Post a Comment