திருமணம் செய்வதற்கு ஒரு ஆணும் பெண்ணும் எப்படி அவசியமோ, அதே போலத் தான்
முகூர்த்த நாள் நிர்ணயிப்பதும். ஒரு குழந்தையின் வளர்ச்சி, ஆரோக்கியம்,
புகழ், ஆயுள் போன்றவற்றைப் பார்க்க எப்படி குழந்தையின் ஜனன ஜாதகம் அவசியமோ
அதே போல முகூர்த்த நாள் மற்றும் நேரம் நிர்ணயம் அவசியமாகிறது. கணவன், மனைவி
பந்தம், சமுதாயத்தில்அவர்கள் வாழ்க்கை சிறத்தல், . இருவருக்கும் உள்ள
அன்னியோன்யம், குழந்தைப்பேறு முதலிய பல நிகழ்வுகள் நல்லபடியாக அமைவதற்கு
முகூர்த்த நாள் மற்றும் நேர நிர்ணயம் அவசியமாகிறது . மணமக்களின்
ஜாதகங்களில் ஒரு சில குறைகள் இருந்தாலும் இந்த முகூர்த்த நேர லக்னம் நன்கு
அமையுமானால் அந்தக் குறைகள் தெரியாமல் போகிறது. நாள் செய்வதை நல்லோரும்
செய்யார். நல்ல நாள் பார்த்து எந்தவொரு வேலையையும் செய்தோம் என்றால் அந்த
வேலையை சிறந்த முறையில் நவக்கிரகங்கள் நமக்கு அமைத்துக் கொடுத்துவிடும்.
மணமக்கள் இருவர் ஜாதகங் களையும் ஒப்பிட்டுப் பார்த்து இவர்களுக்கு திருமணம்
செய்விக்கலாம் என்று ஜோதிடர்கள் தெரிவித்த பின்பு, இருவர் வீட்டில் உள்ள
அனைவரும் சம்மதம் தெரிவித்த பின்னர் திருமண முகூர்த்த நாளை தேர்வு செய்ய
முற்படவேண்டும். திருமணம் ஒருவருக்கு செய்ய முயலும் போது முதலில் அவரது
நட்சத்திரத்தின்படி குருபலம் உள்ளதா என்று அறிய வேண்டும். குருபகவான்
அவரவர் ஜென்ம ராசிக்கு 2, 5, 7, 9, 11 ம் இடங்களில் பிரவேசம் செய்யும் போது
குரு பலம் இருப்பதாக கருதப்படுகிறது. குருபகவான் 2 ல் இருக்கும் போது
திருமணம் செய்வித்தால் அந்த தம்பதியருக்கு தனசம்பத்துகள் கிடைக்கும். 5 ல்
குரு இருக்கும் போது திருமணம் நடந்தால் சொற்படி நடக்கும் சத்புத்திரர்கள்
பிறப்பார்கள். 7ல் குரு இருந்தால் பெண்கள் என்றும் தீர்க்கசுமங்கலியாக
இருப்பார்கள். 9ல் இருக்கும்போது கணவருக்கு சகல செல்வாக்கும், 11ல் குரு
தங்கும் போது திருமணம் செய்தால் மனைவி அல்லது கணவன் மூலம் செல்வங்கள் பல
வந்து சேரும். குருபலம் ஆண் பெண் இருவருக்கும் இருப்பின் மிக்க நலம். இதில்
பெண்ணிற்கு மட்டுமாவது இருப்பது இன்றியமையாதது. குருபலம் போலவே சூரிய
பலமும் சிறிது முக்கியமாக கருதப்படுகிறது. சூரிய பலம் என்பது ஒருவரின்
ஜென்ம ராசிக்கு சூரியன் 3, 6, 10, 11 ம் இடங்களில் பிரவேசம் செய்வதே ஆகும்.
சூரிய பலம் பெண்ணைவிட ஆணுக்கு மிக முக்கியமாக கருதப்படுகிறது.
திருமணக்காலங்கள் மணமக்களுக்கு யோகாதிபதிகளின் தசாபுக்திகளாக அமைந்தால்
அந்தத் திருமணம் சீரும் சிறப்புமாக அமையும். மணமக்கள் இருவருக்கும்
குருபலம் இல்லாத சமயத்தில் இவர்களுக்கு சுக்ரன், அல்லது 2, 7, 11 ம்
அதிபதிகளின் தசாபுக்திகள் நடந்தாலும் திருமணம் செய்விக்கலாம். மணமக்களுக்கு
அஷ்டம சனி காலத்திலும் விரய சனி நேரத்திலும் திருமணத்தை தள்ளிப்போடுவது
சிறப்பை தரும். குருபலம், சூரியபலம், நல்ல தசாபுக்தி மற்றும் சனிபகவானின்
தாக்கம் இல்லாத காலங்களை தேர்ந்தெடுத்த பின்னர் ஒரு நல்ல நாளை கீழ்கண்டவாறு
தேர்வு செய்யலாம். 1. சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி மற்றும் தை மாதங்ளை
தேர்வு செய்து இவைகளில் மலமாதம் இல்லாத மாதத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். 2.
வளர்பிறையின் துவிதியை, திரிதியை, பஞ்சமி, சப்தமி மற்றும் திரயோதசி உள்ள
நாட்கள். 3. இருவர் நட்சத்திரத்திற்கும் தாராபலம் ஏற்றார்போல் உள்ள
நாட்கள். 4. அன்றைக்கு சந்திரன் ஐன்ம ராசிக்கு 1, 3, 6, 7, 10, 11
ராசிகளில் இருப்பது. 5. இரு கண்ணுள்ள நாட்களான புதன், வியாழன் மற்றும்
வெள்ளிக்கிழமைகள் சிறந்தது. ஒரு கண்ணுள்ள நாட்களான ஞாயிறு மற்றும் திங்கள்
பாதி சிறந்தது. குருட்டு நாட்களான செவ்வாய் சனியை தவிர்ப்பது உத்தமம். 6.
அக்னி ராசிகளான சிம்மம் மற்றும் மேஷம் முகூர்த்த லக்னமாக இல்லாது இருப்பது.
7. முகூர்த்த லக்னத்திற்க்கு 7, 8 இடங்கள் திதி சூன்ய ராசிகளாக அமையாமல்
இருப்பது. 8. முகூர்த்த லக்னத்திற்க்கு ஏழாமிடம் சுத்தமாக இருப்பின் நல்ல
கணவன் மனைவி அமையும். எட்டாம் இடம் சுத்தமாயின் நீடித்த திருமணபந்தம். 12ம்
இடம் சந்தோஷத்தை குறிக்கின்றது. ஆக 2,7,8ம் இடங்கள் சுத்தமாக இருக்க
வேண்டும் மற்றும் எட்டாம் இடத்தை குரு அல்லது சுக்ரன் பார்க்கலாமேவொழிய
இந்த இடங்களில்இவர்கள் யாரும் இருக்கக்கூடாது. 9. உபஜெய ஸ்தானங்களான 3, 6,
11 ல் தீய கிரகங்கள் இருப்பது வாழ்க்கையின் வெற்றி மற்றும் ஆதாயங்களை
குறிக்கும். 10. திருமணநாள் மணமக்களின் ஜென்ம நட்சத்திரமாகவோ, ஜென்ம
கிழமையாகவோஅமையாமல் இருப்பது மிக நல்லது. 11. நவக்கிரகங்களில் அதிக
சுபத்தன்மை பொருந்திய குருவும் சுக்ரனும் மூடம் என்கின்றஅஸ்தங்க தோஷம்
அடைந்திருக்க கூடவே கூடாது. 12. ராகு காலம் மற்றும் ஏமகண்டம் போன்ற விஷ
நேரங்களை ஒதுக்க வேண்டும். குளிகைகாலத்தைக் கூட தவிர்ப்பது சிறந்தது.
காரணம் குளிகை காலத்தில் செய்யும் காரியங்கள்திரும்பவும் செய்ய நேரிடலாம்.
13. மொத்தம் உள்ள பதினோறு கரணங்களில் அசுப கரணங்களை ஒதுக்கவேண்டும்.
சித்தயோகத்தை மாங்கல்ய தாரணத்திற்கும் அமிர்தயோகத்தை சாந்தி
முகூர்த்தத்திற்க்கும் தேர்வு செய்தல் வேண்டும். 14. “பஞ்சகம்” என்ற
முறையில் நல்ல நாளை தேர்வு செய்ய வேண்டும். பஞ்சகமுறையில் பார்த்தால்
வருடத்திற்க்கு மிக குறைந்த முகூர்த்த நாட்களே வரும்.எனவே இதற்கு பரிகாரமாக
இரத்தினம், சந்தனம், எலுமிச்சை, தீபம் மற்றும் தானியம்முதலியவைகளை
துணிமணிகளுடன் சேர்த்து தானம் செய்யவேண்டும். 15. பெண்ணிற்கு
மாதவிலக்குக்கு உரிய நாட்களாக அமையாமல் இருப்பது அவசியம்.ஏனென்றால் இதில்
புனிதமான அக்னியை வார்த்து இறைவனை அதில் வரவழைத்து வணங்குகிறோம். 16.
திருமணம் செய்ய இருக்கும் நாளுக்கு 15 தினங்கள் முன்பு அவரவர் குல
தெய்வத்திற்கு பொங்கலிட்டு ஆராதனைகள் செய்து பிறகு முன்னோர்களை
தியானித்துஅனுமதி பெறவேண்டும். இப்படி அமையும் திருமண உறவு என்றும்
நிலைத்திருப்பதுடன், ஒருவரையொருவர் விட்டுத் தராமல் அன்புடன் இல்லற இன்பம்
பெறுவார்கள் என்பது ஜோதிட ரகசியங்களில் ஒன்றாகும்.
No comments:
Post a Comment